Nov 4, 2015

ஆசிரியைகள் 'ஓவர் கோட்' திட்டம் 'பணால்!' | kalviseithi

பள்ளிகளில், 'ஓவர் கோட்' அணியும் திட்டத்திற்கு ஆசிரியை களிடம் வரவேற்பில்லை; அதனால், இத்திட்டம், ஒரு பள்ளியுடன் கைவிடப்பட்டுள்ளது. மாணவர்கள் மற்றும் தவறான எண்ணமுடைய சில ஆசிரியர்களின் கேலி, கிண்டல் மற்றும் தவறான பார்வையில் இருந்து


தப்பிக்க, ஆசிரியைகளுக்கு உடை கட்டுப்பாடு கொண்டு வருவது குறித்து, பள்ளி கல்வித்துறை ஆலோசித்தது. மதுரை மாவட்டத்தில், ஆசிரியைகளுக்கு, 'ஓவர் கோட்' என்ற மேலங்கி அணியும் முறை, ஒரு பள்ளியில் மட்டும், ஒரு மாதத்திற்கு முன் அறிமுகமானது.

மதுரை மாவட்டம், பேரையூர் தாலுகா, வன்னிவேலன் பட்டி அரசு உயர்நிலைப் பள்ளியில் தான் இந்த திட்டம் அறிமுகமானது. 'படிப்படியாக மற்ற பள்ளிகளிலும், இந்தத் திட்டத்தை சோதனை முறையில் அமல்படுத்த தடையில்லை' என, கல்வித்துறை அதிகாரிகளும் வாய்மொழியாக ஒப்புதல் அளித்தனர்.ஆனாலும், இதுவரை எந்த பள்ளியிலும் இந்த திட்டம் அறிமுகம் செய்யப்படவில்லை. இதுபற்றி விசாரித்த போது, 'ஆசிரியைகளே, 'ஓவர் கோட்' திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். அவர்களுக்கு இதில் ஆர்வம் இல்லை' என, அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.


ஆசிரியைகள் சிலர் கூறும்போது, 'ஒரு சில மாணவர்கள் தவறாக நடக்கின்றனர் என்பதற்காக, இதுவரை பின்பற்றிய உடை விதிகளை மாற்ற எங்களுக்கு ஆர்வமில்லை. மாணவர்களை திருத்த வேண்டும்; பெற்றோருக்கு அறிவுரை வழங்கி, அவர்களை நல்லவர்களாக வளர்க்க தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும். 'மாறாக, இதுபோன்ற தடுப்புத் திட்டங்கள் கொண்டு வந்தால், தவறான மாணவர்களின் செயல்பாடு அதிகரிக்குமே தவிர, கட்டுக்குள் வராது' என்றனர்.

No comments:

Post a Comment