Sep 10, 2016

அரசு பள்ளி ஆசிரியர்கள் ஏமாற்றம் : விருது தேர்வு குறித்து விசாரணை?

ஆசிரியர்களுக்கு விருது வழங்கியதில், இந்த ஆண்டும், சென்னை அரசு பள்ளி ஆசிரியர்கள் கடும் ஏமாற்றம் அடைந்துள்ளனர்; விருதுக்கான தேர்வு குறித்து விசாரணை நடத்தவலியுறுத்தி உள்ளனர்.ஆசிரியர் தினத்தை
முன்னிட்டு, செப்., 5ல், தேசிய அளவிலும், மாநில அளவிலும் தனித்தனியே விருதுகள் வழங்கப்பட்டன.

  தேசிய விருதுக்காக, தமிழகத்தில் தேர்வான,23 பேரில், சென்னையில், ஒரு அரசு பள்ளி ஆசிரியர் கூட இல்லை. மாநில விருதுக்கு தேர்வான, 379 பேரில், சென்னை மாவட்டத்தில், ஒரு அரசு பள்ளி ஆசிரியர் மட்டுமே இடம்பெற்றார். இதனால், அரசு பள்ளி ஆசிரியர்கள் ஏமாற்றமும், வேதனையும் அடைந்துள்ளனர்.

இதுகுறித்து, ஆசிரியர்கள் கூறியதாவது:சென்னையில், அலுவல் சார்ந்த பணிகளில், அதிக ஆசிரியர்கள் பயன்படுத்தப்படுகின்றனர். பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் சாதித்த, அரசு பள்ளி ஆசிரியர்கள், ராதாகிருஷ்ணன் விருதுக்கு விண்ணப்பித்தனர். அதற்கான, 'பைல்'களை, முதன்மை கல்வி அலுவலககமிட்டியினர் ஆய்வு செய்து செயலகத்துக்கும், இயக்குனர் அலுவலகத்துக்கும் பரிந்துரைத்தனர். உயர் அதிகாரிகளின் இறுதி பட்டியலில், தனியார் பள்ளி ஆசிரியர்களின், பல பெயர்கள் இடம் பெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது. 'பைல்' எங்கே மாறியது என, கமிட்டியினர் ஆச்சரியத்தில் உள்ளனர். விருது பெறக்கூட தகுதியில்லாத ஆசிரியர்கள், சென்னை அரசு பள்ளிகளில் பணியாற்றுகின்றனரா என, கிண்டல் அடிக்கின்றனர்; வேதனையாகஉள்ளது. விருதுக்கான தேர்வு குறித்து விசாரணை நடத்த வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

கோவையில் சிக்கல் :


கோவை மாவட்டத்தில், அரசு பள்ளி தலைமைஆசிரியர் ஒருவர், பார்வையற்ற ஆசிரியரை துன்புறுத்தியதுதொடர்பான புகார் நிலுவையில் உள்ள நிலையில், அவருக்கு நல்லாசிரியர் விருது கொடுத்தது, சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. விசாரணை நடத்த, தமிழ்நாடு கலை ஆசிரியர் சங்கம், முதல்வர் தனிப்பிரிவில் புகார் செய்துள்ளது.

No comments:

Post a Comment