அரசு மற்றும் அரசின் அங்கீகாரம் பெற்ற
பி.எட். கல்லூரிகளில், ஆசிரியப் பயிற்சி படிப்பை
முடித்துவிட்டு, அரசுப் பள்ளிகளில் கணினி அறிவியல் ஆசிரியர்களாகப் பணியாற்ற, கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக
காத்திருக்கும் 39019 பேர், 'எங்களுக்கு அரசுப் பள்ளிகளில் பணியிடங்கள்இருந்தும் வேலை வழங்கக்
கூடாது' என்பதுதான் தமிழக அரசின் கொள்கை முடிவா
என்று வேதனைக் குரல் எழுப்பியுள்ளனர்.
கடந்த 30.07.2016 அன்று, 'கமிஷன்' பிரச்னையால் முடங்கியதா கம்ப்யூட்டர் கல்வித் திட்டம்?' என்ற தலைப்பில் விகடன்.காம் இணையதளத்தில் செய்தி
வெளியிடப்பட்டிருந்தது. அதில் கம்ப்யூட்டர் கல்வித் திட்டம் முடங்கியதால் பாதிக்கப்பட்ட கம்ப்யூட்டர்
சயின்ஸ் ஆசிரியர்கள், அரசுப்பள்ளி மாணவர்களது நிலை
குறித்தும், கல்வித்துறை அதிகாரிகளின் போக்கு குறித்தும் விரிவாகக்
குறிப்பிடப்பட்டிருந்தது. அந்தச் செய்தியைப் படித்த கணினி அறிவியல் ஆசிரியர்கள், நம்மிடம், அவர்களின் இன்றைய நிலை குறித்தும் அரசின் பாராமுகம் குறித்தும் மிக
விரிவாகப் பகிர்ந்து கொண்டனர்.
அப்போது ," கணினி ஆசிரியர்களாகப் பள்ளிகளில் பணியாற்றுவதன்
மூலம், அரசுப்பள்ளி மாணவர்களும் தனியார்ப் பள்ளி
மாணவர்களுக்கு இணையாக கணினிகளைக் கையாளவும் தொழில் நுட்ப வளர்ச்சிப் பெறவும் உதவிட
முடியும் என்ற எங்களின் கனவு கானல் நீராகி விட்டது. மாணவர்களின் எதிர்காலம்
இருண்டுகிடக்கிறது" என்றும் மனம் வெதும்ப தெரிவித்தனர்.
இது தொடர்பாக நம்மிடம் பேசிய தமிழ்நாடு
பி.எட். கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரி ஆசிரியர்கள் சங்கத்தின் மாநில
செயலாளர் வே.குமரேசன்,"கடந்த இரண்டு மூன்று சட்டமன்றத்
தேர்தல்களிலும்கணினி அறிவியல் பி.எட். பட்டதாரிகளுக்கு தமிழக அரசுப்பள்ளிகளில்
ஆசிரியர் பணி வழங்கப்படும் என்று முக்கிய கட்சிகள் வாக்குறுதிகள்
அளித்துள்ளன.இதில், ஆளும் அதிமுகவும் அடக்கம். ஆனால்
ஆட்சிக்கு வந்ததும் வழக்கம் போல எங்களை மறந்துவிடுகிறார்கள். மாநிலம் முழுக்க 39019 பேர் இப்போது பி.எட். படிப்பை முடித்துவிட்டு, அரசு வேலை வழங்கும் என்று நம்பியிருந்த நிலையில், தமிழக அரசின் தொடர் புறக்கணிப்பு எங்களின் வாழ்க்கையைக்
கேள்விக்குறியாகியுள்ளது. மொத்தமாக 39 ஆயிரம் பேரும்
வாழ்வாதராத்தை இழந்து நிற்கிறோம். இது தொடர்பாக
முதலமைச்சர் தனிப்பிரிவில் 47 முறை மனு
அளித்துள்ளோம். ஆனால் பலன் இல்லை. பள்ளிக்கல்வித்துறையிலும் மனு அளித்துள்ளோம்.
இது அரசின் கொள்கை முடிவு என்று கூறிவிட்டு, புறக்கணித்துவிடுகிறார்கள். எங்களுக்கு
வேலை வழங்கக் கூடாது என்பதுதான் அரசின் கொள்கை முடிவாஎன்றால், அதற்கும் அவர்களிடம் பதில் இல்லை. துறை அமைச்சர் பெஞ்சமினிடமும்
எங்களின் நிலையை விளக்கி மனு அளித்துள்ளோம். மாவட்ட ஆட்சியர்களிடமும் மனு
அளித்துள்ளோம். பல கட்டமாகமாவட்ட அளவிலும், மாநில அளவிலும் பல்வேறு போராட்டங்களும் நடத்தியுள்ளோம். ஆனால் எங்கள்
மீதான அரசின் பாராமுகம் தொடருகிறது." என்று வேதனை தெரிவித்தார்.தமிழ்நாடு
பி.எட். கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரி ஆசிரியர்கள் சங்கத்தின் மாநில துணைத்
தலைவர் எஸ். கார்த்திக் கூறுகையில்," சமச்சீர் கல்வி
பாடத் திட்டத்தில், கம்ப்யூட்டர் சயின்ஸ் படிப்பு 5 ஆண்டுகளாக முடங்கிப் போயுள்ளது.
அதே நேரத்தில் மேல்நிலைப் பள்ளிகளில்
கம்ப்யூட்டர் பாடம் இருக்கிறது. அரசுநடுநிலைப் பள்ளிகளில் எஸ்.எஸ்.ஏ. மூலம்
ஐ.டி.சி. திட்டமும் அமலில் உள்ளது. இதில் ஆசிரியர்களுக்குமட்டுமே கணினி பயிற்சித்
தரப்படுகிறது. மாணவர்களுக்கு இல்லை. அதில் துறை சார்ந்த அரசு அதிகாரிகள் அக்கறை
காட்டவில்லை. இந்த நிலையில்தான் அரசுப் பள்ளிகளில், கணினி வழிக்கல்வி, 2011ம் ஆண்டு சமச்சீர் கல்வியில்
அறிமுகமானது. தமிழ்நாடு பாட நூல் கழகமும் 6 முதல் 9ம் வகுப்பு வரை பாடப் புத்தகங்களும் அச்சிட்டது. ஆனால் அது
நடைமுறைக்கு வரவில்லை.ஏழைக் கிராப்புற மாணவர்கள் கணினி அறிவுப் பயிற்சி பெறுவதை
தமிழக அரசு விரும்பவில்லையா என்று
தெரியவில்லை. அதே நேரத்தில் தனியார் பள்ளிகள், முதல் வகுப்பிலிருந்தே கம்ப்யூட்டர்
கல்வியை வழங்கிவருகின்றன. இது அரசுப்பள்ளி மாணவர்களுக்கு பெரும் நெருக்கடியை
உண்டாக்கியுள்ளது. மேலும் புதியதாக 300க்கும் மேற்பட்ட
தனியார் பள்ளிகளுக்கு அனுமதியும் தமிழக அரசால் வழங்கப்பட்டுள்ளது. இப்படி
அப்டேட்கல்வி இல்லாத நிலையில்தான் அரசுப்பள்ளிகளில் இருந்து 11 லட்சம் மாணவர்கள், கடந்த 5 ஆண்டுகளில் தனியார் பள்ளிகளை நோக்கி
இடம்பெயர்ந்துள்ளனர். இந்த இடைவெளியை தமிழக அரசுஎப்போது உணரும் என்று தெரியவில்லை.
நடைபெறும் சட்டமன்ற கூட்டத்தொடரிலாவது
கல்வி மானிய விவாதத்தின்போது எங்களுக்கு நல்ல செய்தி வெளிப்படவேண்டும் என்று
எதிர்பார்த்துள்ளோம். ஏனெனில் நாங்கள் போராடி போராடி நொந்துபோயுள்ளோம். இனியும்
போராட எங்களிடம் பணபலமும் இல்லை மனோபலமும் இல்லை.அதனால் உடனே இவ்விஷயத்தில்
முதல்வர் ஜெயலலிதா தலையிட்டு எங்களைக் காக்கவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.
இல்லை என்றால் தற்கொலைதான்தீர்வு என்ற
முடிவிற்கு நாங்கள் தள்ளப்பட்டுவிடுவோம்" என்றார் கண்ணீர் மல்க. இதுதொடர்பாக
பள்ளிக்கல்வித்துறையில் மனு அளித்து புகார் தெரிவித்தீர்களா என்று கேட்டபோது, இந்த மாதமும் மனு அளித்துள்ளோம். பள்ளிக்கல்வித்துறையில் எங்களின்
குறைத் தீர்க்க உரிய நடவடிக்கையும் இல்லை, பதிலும் இல்லை
என்று வேதனையோடு பதிலளித்தனர்.நடப்பு சட்டமன்ற கூட்டத்தொடரிலாவது தங்களது வாழ்வில்
ஒளி ஏற்றுவதற்கான அறிவிப்பை அரசு வெளியிடுமா என ஏக்கத்துடன் காத்திருக்கின்றனர்
கணினி அறிவியல் ஆசிரியர்கள்!
- தேவராஜன்
நன்றி:விகடன்
No comments:
Post a Comment