தமிழகத்தில் உள்ள அரசு மேல்நிலைப்
பள்ளிகளில் பணிபுரிவதற்கு முதுகலை ஆசிரியர்கள் தேர்வுக்கான அறிவிப்பை ஆசிரியர்
தேர்வு வாரியம் எப்பொழுது வெளியிடும் என பட்டதாரிகள் எதிர்பார்த்துள்ளனர்.
தமிழகத்தில் உள்ள மேல்நிலைப் பள்ளிகளில் முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் பணியிடம்
சுமார் 3 ஆயிரத்திற்கு மேல் காலியாக உள்ளதாக
ஆசிரியர் சங்க நிர்வாகிகள் தெரிவிக்கின்றனர். கடந்த 12ம் வகுப்பு பொதுத் தேர்வில் அரசுப் பள்ளி மாணவர்களின் தேர்ச்சி
விகிதம் அதிகரித்தாக கூறினாலும், மருத்துவம், பொறியியல் உயர்கல்விக்கு வெளியிடப்பட்ட தரவரிசைப் பட்டியலில் முதல் 10 இடங்களை அரசுப் பள்ளியை சேர்ந்த மாணவர்கள் யாரும் பெற முடியவில்லை.
ஆனால் பிற மாநிலங்களில் படித்த
மாணவர்கள் முதலிடங்களை பிடித்தனர். இதற்கு காரணம் பெரும்பாலான அரசு மேல்நிலைப்
பள்ளிகளில் முதுகலை ஆசிரியர் பணியிடங்கள் காலியாக இருப்பது தான். குறிப்பாக கல்வியில் பின்தங்கிய மாவட்டங்களில்
ஆசிரியர்கள் பற்றாக்குறை தொடர்ந்து நிலவி வருகிறது. சென்னையில் வசிக்கும்
ஆசிரியர்களில் பலர் வேறு மாவட்டத்திற்கு பணி நியமனம் அளித்தால், மாற்றுப் பணி என்னும் பெயரில் சென்னையை சுற்றியுள்ள ஏதாவது ஒரு
பள்ளியிலோ, பள்ளிக்கல்வித்துறையின் அலுவலகத்திலோ
பணியை பெற்று வந்து விடுகின்றனர். இதனால் அந்த பள்ளி மாணவர்களின் படிப்பு
பாதிக்கப்படுகிறது என ஆசிரியர் சங்க நிர்வாகி ஒருவர் கூறினார். இந்நிலையில் கடந்த பிப்ரவரி மாதம்
பள்ளிக்கல்வித்துறை முதன்மைச் செயலாளர் சபிதா வெளியிட்டுள்ள அரசு உத்தரவில்,
பள்ளிக் கல்வித்துறையில் 2015&16 ம் கல்வி ஆண்டில் 2125
முதுகலை ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளது.
அவற்றை நிரப்புவதற்கு நேரடி நியமனத்தின் மூலம் 1062 முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்களும், இதர நியமனம் முறைகள் மூலம் 1063 பேரும் முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்களாக நியமனம் செய்யப்பட
உள்ளனர். இந்த நேரடி நியமனங்களுக்குரிய
காலிப்பணியிடங்களில் தற்காலிக பணியிடங்கள் ஏதும் இருந்தால் மாநில மற்றும்
சார்நிலைப் பணிகளுக்கான பொது விதிகளில் தளர்வு செய்யப்படுகிறது. பதவி உயர்விற்கான
பணியிடங்களை நிறைவுச் செய்யும் போது சிறப்பு, பொது விதிகளை பின்பற்றி மேற்கொள்ளப்பட வேண்டும். மேலும் அரசு
விதிகளின் அடிப்படையில் பதவி உயர்வுகள் வழங்க வேண்டும். இந்த 2125 முதுகலை ஆசிரியர் பணியிடங்களில் நேரடி நியமனம் மூலம் 50 சதவீதமான 1062 பணியிடங்களை தற்போதுள்ள
நடைமுறைகளிலுள்ள விதிமுறைகளை பின்பற்றி ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நிரப்பிக்
கொள்ளலாம் என அதில் கூறியிருந்தார். இதனைத் தொடர்ந்து நடப்பு கல்வி ஆண்டில்
ஆசிரியர்களை நேரடி நியமனம் மூலம் ஆசிரியர் தேர்வு வாரியம் நியமனம் செய்வதற்காக
பள்ளிக்கல்வித்துறை ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு கடிதம் அளித்தது. ஆனால் சட்டமன்றத் தேர்தல் நடைபெறுவதை காரணம்
காட்டி ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பை வெளியிடாமல் நிறுத்தி வைத்திருந்தது.
தற்பொழுது மாநில கல்வியில் ஆசிரியர் மற்றும் பயிற்சி நிறுவனம், மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் காலியாக உள்ள 272 பணியிடங்களை நிரப்புவதற்கு வரும் 15 ம் தேதி முதல் விண்ணப்பம் அளிக்க உள்ளது. எனவே இதனை தொடர்ந்து
முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான அறிவிப்பை வெளியிட வேண்டும் என பட்டதாரிகள்
எதிர்பார்க்கின்றனர்.
No comments:
Post a Comment