Jun 9, 2016

இப்படி தான் இருக்கும் 'ஸ்மார்ட்' ரேஷன் கார்டு:அக்டோபரில் கிடைக்க வாய்ப்பு

தமிழகத்தில், 'ஸ்மார்ட்' ரேஷன் கார்டு வழங்கும் பணியை, அக்., மாதம் முதல் துவக்க, உணவுத் துறை முடிவு செய்துள்ளது. ரேஷன் கடையில் வழங்கப்படும் இலவச அரிசி, குறைந்த விலையில் விற்கப்படும் பருப்பு
உள்ளிட்ட பொருட்கள் வினியோகத்தில் , முறைகேடு நடக்கிறது. இதைத்
தடுக்க, ஸ்மார்ட் ரேஷன் கார்டு வழங்க, தமிழக அரசு முடிவு செய்தது. இதை, அக்., முதல் செயல்படுத்த, உணவுத் துறை காலக்கெடு நிர்ணயித்து உள்ளது.


திட்டம் செயல்படுத்தும் முறை
அனைத்து ரேஷன் கடைகளுக்கும், 'டேப்ளட்' இயந்திரம் வழங்கப்பட்டு வருகிறது. இதற்கு, 'பாயின்ட் ஆப் சேல்' என, பெயரிடப்பட்டு உள்ளது

ரேஷன் கார்டுதாரர், குடும்ப உறுப்பினர்கள் அனைவரின், 'ஆதார்' அட்டைகளை, ரேஷன் ஊழியரிடம் வழங்க வேண்டும்; அதை, அவர் டேப்ளட் இயந்திரத்தில், 'ஸ்கேன்' செய்து விட்டு, ரேஷன் கார்டுதாரரிடம் திரும்ப வழங்குவார்
ரேஷன் கார்டுதாரரிடம் மொபைல் எண்ணும் கேட்டு வாங்கப்படும்
தற்போது, 13 மாவட்டங்களில் உள்ள ரேஷன் கடைகளில், டேப்ளட் கருவி வழங்கப்பட்டு உள்ளது; ஜூலை இறுதிக்குள், அனைத்து மாவட்டங்களுக்கும் வழங்கப்படும்
ரேஷன் கடைகளில், செப்., வரை, ஆதார் விவரமும், மொபைல் எண்ணும் வாங்கப்படும்
ரேஷன் கடையில், ஸ்கேன் செய்யப்பட்ட ஆதார் விவரம், உணவுத் துறை அலுவலகத்தின், 'மெயின் சர்வருக்கு' சென்று விடும்
ஆதார் விவரத்தின் அடிப்படையில், 'கிரெடிட்,டெபிட் கார்டு' வடிவில் ஸ்மார்ட் ரேஷன் கார்டு அச்சிடப்படும். அந்த கார்டில், தமிழக அரசின் முத்திரை இடம்பெறும்; குடும்பத் தலைவர் புகைப்படம் இடம் பெறவும் வாய்ப்புள்ளது
ரேஷன் கடை வாயிலாக, மக்களுக்கு ஸ்மார்ட் ரேஷன் கார்டுவினியோகம் நடக்கும்
கார்டுதாரர், ரேஷன் கடைக்கு சென்று பொருட்கள் வாங்கும் போது, ஸ்மார்ட் ரேஷன் கார்டை வழங்கினால், ஊழியர் அதை, பாயின்ட் ஆப் சேல் இயந்திரத்தில் ஸ்கேன் செய்த பின், 'பில்' போடுவார்.அந்த விவரம், உடனே கார்டுதாரரின் மொபைல் போனுக்கு, எஸ்.எம்.எஸ்., மூலம் செல்லும்; உணவுத் துறை சர்வரிலும்பதிவாகும்.இதன் மூலம், ரேஷன் கடைகளில் முறைகேடு குறைய வாய்ப்பு உள்ளது.இதுகுறித்து, உணவு மற்றும் கூட்டுறவு துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:தமிழக அரசு அறிவித்தால், இந்த மாத இறுதிக்குள் அரியலுார், புதுக்கோட்டையில், ஸ்மார்ட் ரேஷன் கார்டு வழங்க முடியும். இருப்பினும், அக்.,மாதம் முதல், ஸ்மார்ட் ரேஷன்கார்டு வழங்க, முடிவு செய்யப்பட்டு உள்ளது. அரசின் முடிவை பொறுத்து, திட்டத்தில் மாறுதல் ஏற்பட வாய்ப்புள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

வழிகாட்டும் புதுச்சேரி
புதுச்சேரி அரசு, 2011ல், புத்தக வடிவில் இருந்த ரேஷன் கார்டுகளை, ஸ்மார்ட் கார்டு வடிவில்வழங்க முடிவு செய்தது. ஆதார் கார்டுக்கு எடுக்கப்பட்ட புகைப்படம், கண் கருவிழி படம், கைரேகைகள், ஸ்மார்ட் கார்டுக்கு பயன்படுத்தப்பட்டன. இந்த தகவல்களை சிறிய, 'சிப்' வடிவில் ஏற்படுத்தி, குடும்பத் தலைவர் புகைப்படத்துடன் கூடிய ஸ்மார்ட் ரேஷன் கார்டு தயாரித்து, மக்களுக்கு வழங்கப்பட்டது. புதுச்சேரியில், 2.50 லட்சம் ஸ்மார்ட் ரேஷன் கார்டுகள் வழங்கப்பட்டு உள்ளன.



குடும்பத் தலைவர், தலைவி அல்லது ரேஷன் கார்டு பெயர் வரிசையில் முதலில் உள்ள, இரண்டு நபர்களில் யாரேனும் ஒருவர் ரேஷன் கடைக்கு சென்று ஸ்மார்ட் கார்டு வழங்கினால், அங்கு கையடக்க, பி.ஓ.எஸ்., என்ற, 'பாயின்ட் சேல் டிவைஸ்' என்ற இயந்திரத்தில் செருகி, குடும்ப உறுப்பினரின் கைரேகை பதிவு செய்த உடன், பொருட்கள் வழங்கியதற்கான ரசீது வழங்கப்படும். இந்த திட்டத்தில், சில மாறுதல்களை செய்து, தமிழகத்தில் செயல்படுத்த, தமிழக அரசு முடிவு செய்துள்ளது.