வில்லிப்புத்தூரார் என்னும் புலவர்
ஒருவர் இருந்தார்.
நல்ல தமிழ்ப்புலமை கொண்டவர். ஆனால்
புலவர்க்கே உரிய ஆணவமும் கொண்டவர்.
அவர் வருவோர் போவோர் எல்லாரையும்
வாதத்திற்கு அழைப்பார். அதில் தோற்பவர் பாடு திண்டாட்டம் தான். தோற்றுவிட்டால்
தோற்றவர்களின் காதை தன் கையில் வைத்திருக்கும் காதறுக்கும் துரட்டியால் ஒட்ட
அறுத்து விடுவார். இதனால் காது இல்லாதவரைக் கண்டால் இவர் வில்லிப்பூத்தூராரிடம்
வாதில் தோற்றவர் என தெரிந்து கொள்ளலாம். இதனால் புலவர்கள் அவர் முன்னிலையில் செல்ல
அஞ்சியிருந்தனர்.
எந்த வில்லனுக்கும் அதி வில்லன் ஒருவர்
இருப்பார் இல்லையா? இருந்தார். வில்லிப்பூத்தூராரின் ஆணவம்
அழியும் காலம் வந்தது.
தமிழ் அழகன் முருகனைப்பாடும்
அருணகிரிநாதர் அந்த ஊருக்கு வந்தார். ஒரு புலவர் வந்தது அறிந்த வில்லிப்புத்தூரார்
அருணகிரிநாதரையும் வாதுக்கழைத்தார்.
அருணகிரிநாதர் சம்மதித்து விட்டார்.
ஒரு புது கட்டளையும் போட்டார். அதாவது இருவர் கையிலும் காதறுக்கும் துரட்டி
இருக்கவேண்டும். வென்றவர் தொரண்டியை ஒரு இழுப்பு. தோற்றவர் காது அறுந்து
வந்துவிடும்.
வில்லிப்புத்தூராருக்கு கிலி
வந்துவி்ட்டது. வெளிக்காட்டிக் கொள்ளாமல் சம்மதித்துவிட்டார்.
போட்டி ஆரம்பமாகியது.
54வது பாடலை அருணகிரிநாதர் பாடினார்.
“திதத்தத்தத் தித்தத் திதிதாதை தாததுத்
தித்தத்திதா
திதத்தத்தத் தித்த திதித்தித்த
தேதுத்து தித்திதத்தா
திதத்தத்தத் தித்தத்தை தாததி தேதுதை
தாததத்து
திதத்தத்தத் தித்தித்தி தீதீ திதிதுதி
தீதொத்ததே”
பாடி முடித்து அதன் பொருள் கேட்டார்.
வில்லிப்புத்தூரார் விதிர்த்துப்போய்
விட்டார்.
எத்தனை பாடலை பாடியிருப்போம். எத்தனை
பேரின் காதை அறுத்திருப்போம்.
ஆனால் இப்பாடல் தலையும் புரியவில்லை,
காலும் புரியவில்லை.
தோல்வியை சம்மதிப்பதைத்தவிர வேறு
வழியில்லை. காதை இழக்கப்போவது உறுதி.
அவரது ஆணவம் அழிந்தது. தோல்வியை
ஒப்புக்கொண்டார். பாடலுக்கு விளக்கம் கேட்டார்.
அருணகிரிநாதரோ போட்டிவிதி்ப்படி அவர்
காதை அறுக்கவில்லை. மேன்மக்கள் மேன்மக்களே.
அந்த பாடலுக்கான விளக்கம் இதுவே.
திதத்தத் தத்தித்த – “திதத்தத் தத்தித்த” என்னும் தாளமானங்களை,
திதி – திருநடனத்தால் காக்கின்ற
தாதை – பரமசிவனும்
தாத – பிரமனும்
துத்தி – படப்பொறியினையுடைய
தத்தி – பாம்பினுடைய
தா – இடத்தையும்
தித – நிலைபெற்று
தத்து – ததும்புகின்ற
அத்தி – சமுத்திரத்தையும் பாயலாகக்கொண்டு
ததி – தயிரானது
தித்தித்ததே – தித்திக்கின்றதென்று
து – உண்ட கண்ணனும்
துதித்து – துதி செய்து வணங்குகின்ற
இதத்து – பேரின்ப சொரூபியான
ஆதி – முதல்வனே!
தத்தத்து – தந்தத்தையுடைய
அத்தி – அயிராவதம் என்னும் யானையால் வளர்க்கப்பட்ட
தத்தை – கிளி போன்ற தெய்வயானைக்கு
தாத – தொண்டனே!
தீதே – தீமையே
துதை – நெருங்கிய
தாது – சப்த தாதுக்களால் நிறைந்ததும்
அதத்து – மரணத்தோடும்
உதி – ஜனனத்தோடும்
தத்தும் – பல தத்துக்களோடும்
அத்து – இசைவுற்றதுமான
அத்தி – எலும்புகளை மூடிய
தித்தி – பையாகிய இவ்வுடல்
தீ – அக்கினியினால்
தீ – தகிக்கப்படுகின்ற
திதி – அந்நாளிலே
துதி – உன்னைத் துதிக்கும்
தீ – புத்தி
தொத்தது – உனக்கே அடிமையாகவேண்டும்
இவ்வகைப்பாடல்கள் “ஏகாக்ஷரப் பாடல்” என்று சொல்வார்கள். ஏகம் என்றால்
ஒன்று. அக்ஷரம் என்றால் எழுத்து. ஓரெழுத்து பாடல்.
அப்பாடல் அருணகிரிநாதரின் கந்தர்
அந்தாதியின் 54 ஆவது பாடல்.
அதிசயம் அதிசயிக்கும்.!!!
தமிழ் உலக மொழிகளில் எல்லாம் சிற்ந்தது
என்பதற்க்கு இதை விட வேறு என்ன சாட்சி வேண்டும்.