''அனிமேஷன் துறை படிப்புகளை தேர்வு
செய்தால் படிக்கும் போதே வேலைவாய்ப்பு தேடி வரும்,'
' என, மதுரை சுப்பலட்சுமி லட்சுமிபதி அறிவியல் கல்லுாரி (எஸ்.எல்.சி.எஸ்.,)
அனிமேஷன் துறைத் தலைவர் திருநாவுக்கரசு
தெரிவித்தார்.மதுரையில் தினமலர் சார்பில் நடந்த வழிகாட்டி நிகழ்ச்சியில் 'அனிமேஷன் மற்றும் கிராபிக் டிசைனிங்' குறித்து அவர் பேசியதாவது:
ஊடகத் துறையில் பிரம்மாண்டத்தை கண்முன்
கொண்டு வர அனிமேஷன் மற்றும் கிராபிக் டிசைனிங் துறை முக்கிய பங்கு வகிக்கிறது.
இப்படிப்பிற்கு பிளஸ் 2 தேர்ச்சி பெற்றால் போதும்.
வித்தியாசமாக சிந்திக்கும் திறன் மட்டும்தான் இதற்கு முதலீடு. தமிழகத்தில்
அனிமேஷன் நிறுவனங்களின் வருகை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அனைத்து
துறைகளிலும் அனிமேஷன் நுட்பம் தேவைப்படுகிறது. இரண்டு ஆண்டுகள் அனுபவம்
பெற்றவர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.60 ஆயிரம் முதல்
சம்பளம் பெறலாம்.
கிராபிக் டிசைன், வெப் டிசைன், பிரின்டிங் டிசைன், லோகோ டிசைன், பிரின்ட் அண்ட் பேக்கிங் டிசைன் என
பல்வேறு தொழில்நுட்ப பிரிவுகளில் படிக்கலாம்.
24 மணி நேரம் நிகழ்ச்சிகளை தரும்
தொலைக்காட்சிகளில், பல நிகழ்ச்சிகளை வெளி நிறுவனங்கள்தான்
தயாரித்து வழங்குகின்றன. இதன் மூலம் அனிமேஷன் மற்றும் கிராபிக் டிசைனிங்
முடித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு இருந்து கொண்டு இருக்கும். சுப்பலட்சுமி
லட்சுமிபதி அறிவியல் கல்லுாரி போன்ற தரமான கட்டமைப்பு வசதிகள் உள்ள கல்லுாரிகளை
தேர்வு செய்து மாணவர்கள் படிக்க வேண்டும். பெண்கள் இப்படிப்பை முடித்தால், இணையதள வசதியுடன் கம்ப்யூட்டர் இருந்தால் போதும், வீட்டில் இருந்தபடியே ஆயிரக்கணக்கில் சம்பாதிக்கலாம் என்றார்.