தமிழகத்தில் வட மாவட்டங்களில், வெப்ப அலையின் தாக்கம் கடுமையாக இருக்கும். வேலூரில் இன்று
அதிகபட்சமாக 111 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் பதிவானதாக
சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் ஆண்டுதோறும் ஏப்ரல்,
மே, ஜூன் ஆகிய 3 மாதங்களில் சராசரி வெப்பம் 100 டிகிரி ஃபாரன்ஹீட் வரை
பதிவாகும். கோடை வெயிலின் உச்சமான 'கத்திரி'
வெயில் காலத்தில், 105 டிகிரி ஃபாரன்ஹீட் வரை வெப்பம் நிலவும். ஆனால், இந்த ஆண்டு மார்ச் மாதம் முதலே சென்னை, மதுரை, பாளையங்கோட்டை, கரூர் பரமத்தி, கோவை, சேலம், தருமபுரி உள்ளிட்ட முக்கிய நகரங்களில்
கத்திரி தாக்கத்திற்கு முன்னரே 105 டிகிரி ஃபாரன்ஹீட் வரை வெப்பம்
நிலவுகிறது.
தமிழகம், ஓடிசா, ஆந்திரம், ராயலசீமா, தெலங்கானா உள்ளிட்ட பல்வேறு
மாநிலங்களில், வெப்பத்துடன் கூடிய அனல் காற்று வீசி
வருகிறது. இவற்றில் ஓரிரு மாநிலங்களில் வெப்ப அலையின் தாக்கம் காணப்படுகிறது. இதன்
காரணமாக, அதிகபட்சமாக 113 டிகிரி ஃபாரன்ஹீட் வரை வெயில் பதிவாகிறது.
தமிழகம், புதுச்சேரியிலும் அதிகாலை முதலே அனல் காற்றுடன் வெயில்
சுட்டெரிக்கிறது. பகல் 11 முதல் பிற்பகல் 3 மணி வரையிலான நேரங்களில், வெளியில் நடமாட
முடியாத அளவுக்கு அனல் காற்று வீசுகிறது.
கடும் வெப்பத்தால், பொது மக்களும், வாகன ஓட்டிகளும் பெரிதும்
பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
தமிழகத்தில் வேலூர் மாவட்டத்தில்,
இது வரை இல்லாத அளவுக்கு, ஏப்ரல் மாதத்தில் இன்று அதிகபட்சமாக 111 டிகிரி ஃபாரன்ஹீட் அளவுக்கு வெப்பம் பதிவாகி உள்ளது. அதாவது,
சுமார் 108 ஆண்டுகளுக்குப் பின்னர் பதிவாகியது இதுவே என, வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அடுத்து வரும் நாள்களுக்கு பெரும்பாலான
நகரங்களில் வறண்ட வானிலையும், வெப்ப அலையின் தாக்கம் கடுமையாக
நிலவும் வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.