Feb 24, 2016

திருப்பூர்:பிளஸ் 2 பொதுத்தேர்வு வினாத்தாள், திருப்பூருக்கு வந்து சேர்ந்தன. வினாத்தாள் காப்பக மையங்களுக்கு, துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

நடப்பு கல்வியாண்டுக்கான பிளஸ் 2 பொதுத்தேர்வு, மார்ச் 4ல் துவங்கி, ஏப். 1ல் நிறைவடைகிறது. திருப்பூர் மாவட்டத்தில், தனித்தேர்வர் உட்பட மொத்தம், 22 ஆயிரத்து, 742 மாணவ, மாணவியர் இத்தேர்வை எழுத உள்ளனர். இதற்கென, 64 தேர்வு மையங்கள் அமைக்கப்படுகிறது. தமிழ், ஆங்கிலம் மொழித்தாள் பாடங்கள், இயற்பியல், வேதியியல், கம்ப்யூட்டர் சயின்ஸ்,

கணக்கு பதிவியல், வரலாறு உள்ளிட்ட இதர பாடங்களுக்கான அனைத்து வினாத்தாள்களும், அனைத்து மாவட்டங்களுக்கும் அரசு தேர்வுத்துறை இயக்ககம் வாயிலாக, அனுப்பப்பட்டுள்ளன. இவை, நேற்று முன்தினம் இரவு, திருப்பூர் முதன்மை கல்வி அலுவலகத்துக்கு வந்து சேர்ந்தன.

திருப்பூர், பல்லடம், அவிநாசி, தாராபுரம், உடுமலை, காங்கயம் ஆகிய ஆறு இடங்களில், வினாத்தாள் கட்டு காப்பகங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. அங்கிருந்து, தேர்வு நாட்களின் போது, மையங்களுக்கு வினாத்தாள் அனுப்பி வைக்கப்படும். மையங்கள் வாரியாக தேவையான எண்ணிக்கையில், வினாத்தாள் பிரிக்கப்பட்டு, கட்டு காப்பகங்களுக்கு போலீஸ் பாதுகாப்புடன், வினாத்தாள் அடங்கிய பண்டல்கள் அனுப்பப்பட்டுள்ளன. அங்கு, பாதுகாப்பாக வினாத்தாள் பண்டல்கள் வைக்கப்பட்டு, கல்வித்துறை அதிகாரிகள் முன்னிலையில் பூட்டி "சீல்' வைக்கப்பட்டது. இம்மையங்களில், துப்பாக்கி ஏந்திய போலீசார், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.