கோயில்களில் சாமிசிலைகள் பிரதிஷ்டை
செய்து வணங்குவது வழக்கமான நடைமுறை. தேசதலைவர்கள், தியாகிகளுக்கு சிலை அமைப்பதும் வழக்கமான ஒன்று. நடிகர், நடிகைகளுக்கும் கோயில் கட்டி வழிபடும் ரசிகர்கள் உண்டு. ஆனால்
கல்விகற்பித்த ஆசிரியருக்கு கோயில் கட்டி வணங்குவதை கேள்விப்பட்டுள்ளீர்களா அல்லது
கண்டுள்ளீர்ளா? கர்நாடக மாநிலம் விஜயபுரா மாவட்டம்
இண்டி தாலுகாவில் உள்ள அதர்கா கிராமத்தில் கல்வி கற்பித்த
ஆசியருக்கு குரு தட்சணையாக கோயில் கட்டி
அவரது சிலையை பிரதிஷ்டை செய்துள்ளனர். இந்த புகழுக்கு சொந்தமான ஆசிரியர் பெயர்
ரேவண சித்தேஷ்வரா. இவரது சிலைக்கு தினமும் காலை, மாலை நேரங்களில் பூஜைகள் நடக்கிறது.
கடந்த 1889ம் ஆண்டு விஜயபுரா மாவட்டம் பசவன பாகே வாடி தாலுகாவில் வசித்த மன
கோலி கிராமத்தில் சிவப்பா-லட்சுமி பாய் தம்பதியருக்கு மகனாக பிறந்தவர் தான்
ரேவணசித்தேஷ்வரா. இவர் இண்டிதாலுகா அதர்கா கிராமத்தில் ஆசிரியராக பணியாற்றி
வந்துள்ளார். பாமர மக்களாக இருந்த கிராமத்தினரிடையே சமூக உணர்வை ஏற்படுத்தி
விழிப்புணர்வு பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார். இவரின் போதனைகள் கிராமத்தினருக்கு
புத்துணர்வு கொடுத்தது. கிராமத்தை சுத்தமாக வைத்துக் கொள்வது மற்றும் ஒவ்வொரு
வீட்டு பிள்ளையும் கல்வி கற்க வேண்டும் என்ற ஆர்வத்தை தூண்டினார். அதன் பயனாக
ஆயிரக்கணக்கானோர் கல்வி கற்று தேர்ச்சி பெற்றனர். 1925ம் ஆண்டு ரேவண சித்தேஷ்வரா இயற்கை எய்தினார். இவரது மரணம் கிராம
மக்களை பாதித்தது. அவரது நினைவாக அந்த கல்வி மகானுக்கு கோவில் கட்ட கிராம மக்கள்
தீர்மானித்தனர். மக்கள் ஒன்று திரண்டு அவர்களால் இயன்ற பொருளுதவி வழங்கி ஆசிரியர்
ரேவன சித்தேஷ்வராவுக்கு கோயில் எழுப்பினர். கருவறையில் அவரது சிலையை பிரதிஷ்டை
செய்து இன்று வரை கடமை தவறாமல் பூஜை செய்து வழிபட்டு வருகின்றனர்.
ஆசிரியர் தினமான இன்று அகர்தா கிராமம்
விழாக்கோலம் பூண்டுள்ளது. நாட்டில் ஆசிரியர்களுக்கு எங்கும் கோவில் அமையவில்லை.
விஜயபுரா மாவட்டத்தில் உள்ள இந்த ஆசிரியர் கோவிலுக்கு அண்டை மாவட்டத்தில்
இருந்தும் நூற்றுக்கணக்கான ஆசிரியர், ஆசியைகள் வந்து
வழிபட்டு செல்கின்றனர்.
மாணவகள் பங்கு கொள்ளும் கலை
நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எதிர்கால நாட்டின் மன்னர்களை உருவாக்கும்
ஆசிரியர்களுக்கு குருவந்தனம் செய்யும் வகையில் கோயில் கட்டி கும்பிடும் அகர்தா
கிராமத்தினருக்கு நாமும் நன்றி காணிக்கை செலுத்துவோம்
No comments:
Post a Comment